
(27-01-2022) மாமரங்களில் கொழுந்து விடும் காலங்களில் பூச்சி விரட்டியைத் தெளிக்க வேண்டும்.தொடரச்சியாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என திசம்பர் முதல் மார்ச் வரை பூச்சி விரட்டி தெளித்து வந்தால் இப்பூச்சிகள் வருவதில்லை.மாவில் பூக்கள் பூக்கும் தருணத்தில் வேப்பெண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெயை சரிசம அளவில் எடுத்து ஒட்டுவதற்கு காதி சோப்பு கரைசல் சேர்த்து தெளிக்கவும். இலை மற்றும் மூக்கில் உள்ள சாறு தான் இப்பூச்சிகளுக்கான ஒரே உணவு.

நாம் தெளிக்கும் பூச்சிவிரட்டி கரைசலின் நாற்றமும் கசப்பு தன்மையும் தொடர்ச்சியாக இருந்தால் சாறை உறிஞ்ச முடியாமல் பூச்சிகள் இறந்து விடும் அல்லது வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிடும். வேம்பில் உள்ள அசாடிராக்டின் எனும் வேதிப்பொருள் புழுக்களைக் கட்டு படுத்துவதுடன் பூக்களை சேதப்படுத்துவதையும் தடுக்கும். இதுவரை பூக்காத மாமரங்களுக்கு பூச்சி விரட்டி மை வாரம் ஒருமுறை எனத் தொடர்ந்து தெளித்து வரவேண்டும். தற்போது இலைகளில் ஒட்டும் வகையான பசையுடன் கூடிய வேப்பெண்ணெய் வகைகள் கடைகளில் கிடைக்கின்றது.

அதிகாலையில் பனி விலகியதும் இளம் வெயிலில் தான் பூச்சி கொல்லி அல்லது வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்க வேண்டும்.மரங்கள் நனைந்தது போல் தெளிக்கக் கூடாது.தூவானம் போலதான் மரங்களில் படவேண்டும். பவர் ஸ்பிரேயர் மூலமாகத் தெளிக்கும் போது மரத்திற்கும் ஸ்பிரேயரின் முனைக்கும் ஏழு அடி தூரம் இருக்கவேண்டும்.. பூக்களுக்கு அருகில் ஸ்பிரேயர் இருந்தால் பூக்களில் உள்ள மகரந்த தூள் உதிர்ந்து விடும். மா மரங்களில் காலைப் பொழுதிலிருந்து பதினோரு மணிக்குள் மகரந்தம் காற்று வழியாகவோ அல்லது பூச்சிகள் வழியாகவோ சூல் முடிக்கு சென்று கருவுறுதல் நடந்து பிஞ்சுகள் உருவாகும்.
இந்த நேரங்களில் மருந்து தெளித்தால் மகரந்தம் ஈரமாகி சூல் முடிக்கு செல்ல முடியாது.அதனால் கண்டிப்பாக காலை ஒன்பதுமணிக்கு மேல் பூச்சி விரட்டியைத் தெளிக்க கூடாது.
நன்றி.
வெள்ளை சாமி.